
தியத்தலாவ தொடருந்து நிலையம் அருகே ஏற்பட்ட அரச பேருந்து விபத்திற்குக் காரணம், வாகனத்தின் தடுப்பு முறைமையில் (Breaking system) ஏற்பட்ட கோளாறுதான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சாலையிலிருந்து தொடருந்து நிலையச் சாலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது குறித்த பேருந்தின் தடுப்பு செயலிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது தியத்தலாவ ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் யாரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான சாலை விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 85 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரலகன்வில – பொலன்னருவ சாலையில் உள்ள குடவேவ பகுதியில், ஒரு லொறி கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்றதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
மேலும், தம்புட்டெகம – கல்நெவ சாலையில் உள்ள ரஜின சந்திப்பு அருகே ஒரு வாடகைக் கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், கல்நெவவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமட – பண்டாரவெல சாலையில் உள்ள மிரஹாவத்த பகுதியில் லொறி மோதியதில் 58 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில், மினுவாங்கொட புறவழிச்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் பின்பக்க டிரெய்லரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 40 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
கொழும்பு – கண்டி சாலையில் உள்ள மொலகொடவில் பேருந்து மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் மொலகொடவைச் சேர்ந்த 50 வயது நபர் ஆவார். இதற்கிடையில், நேற்று கந்தரா – தலல்லாவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 38 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.




