வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கப்பட்டமையை கண்டித்து மக்கள் எழுச்சிப்போராட்டம்!!

113

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் பதவி நீக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக மக்கள் எழுச்சிப்போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று (29.06.2026) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்திற்கு முன்னால் ஆரம்பமாகிய போராட்டம் அங்கிருந்து மன்னார் வீதி வழியாக பேரணியாக சென்று காமினி மகாவித்தியாலயம் முன்பாக நிறைவுற்றது.

வடக்குமாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி வறிதாக்கப்பட்டதுடன், அவரது மாநகரசபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது, ஆளுநர் ஒருதலைபட்சமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரை ஆளுநர் நீக்கியதை ஜனநாயக படுகொலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இது அவர் தனது பதவியை தொடர்ச்சியாக பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ஆளுநர் செயற்ப்பட்டுள்ளார்.

இந்த அரசு மாகாணசபைகளுக்கான தேர்தலை இதுவரை நடாத்தாமல் இழுத்தடிக்கின்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களையும் முடக்குவதற்கான ஒரு அரசியல்நாடகமே இது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண தமிழ்மக்களே.

காண்டீபன் ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக வெளிப்படையான விசாரணை ஒன்றை செய்திருக்கவேண்டும். ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் பழிவாங்கல். சபையின் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் நீதிமன்றம் ஊடாக எட்டுமாதங்களாக இந்த சபையை முடக்கினார்கள்.

எப்படியாவது இந்த சபைகளை இயங்கவிடாமல் செய்யவேண்டும் என்ற அரசின் நிகழ்ச்சிநிரலே இந்த செயற்ப்பாடு. எனவே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக காண்டீபனின் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்படவேண்டும். என்று கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக செயற்படாதே, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்கலா, ஊழல் அறிக்கையை வெளிபடுத்து” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர்.

அந்தவகையில் தமிழரசுக்கட்சியினர், ஜனநாயகதமிழ் தேசியகூட்ணியின் பங்காளிக் கட்சிகளான, ரெலோ, பிளொட், ஈபீஆர்எல்எப், ஜனநாயகபோராளிகள் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, சிறிரெலோ, ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மகளீர் அமைப்புக்கள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள், கலந்துகொண்டனர்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், சி.சிவநேசன், செட்டிகுளம் பிரதேசசபை, வவுனியா வடக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.