இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்த்தொற்று : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

98

புதிய இணைப்பு : நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர, இன்று நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 என்றும் கூறியுள்ளார்.

இதற்கமைய, தினமும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 950 முதல் 1,000 வரை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,030 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும், அடுத்த மூன்று நாட்களில் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், நோய்த்தொற்று பதிவுகளின் எண்ணிக்கை குறையவில்லை என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவிக்கிறது.

இருப்பினும், வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாதத்தின் கடந்த 25 நாட்களில், நுளம்புகள் காணப்பட்ட 85,712 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 7,188 இடங்களில் நுளம்புகள் கண்டறியப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை வைத்திருந்த 6,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 53,159 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.