வவுனியா காமினி மகாவித்தியாலய மாணவர்களின் முன்மாதிரியான சமூகப் பணி!!

32

வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், சமூக விழிப்புணர்வையும் சுற்றாடல் தூய்மையையும் வலியுறுத்தும் வகையில் சிறப்புத் தூய்மையாக்கல் திட்டமொன்று இன்று (23.07.2026) காலை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள பொதுப் பேருந்து தரிப்பிடம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு இத்தூய்மைப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, பேருந்து தரிப்பிடத்தின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரச் சுவரொட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு, அப்பகுதியில் படிந்திருந்த தூசிகள், குப்பைகள் என்பன மாணவர்களால் அகற்றிச் சுத்தம் செய்யப்பட்டன.

சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் மாணவர்கள் ஆற்றிய இந்தச் சேவை, அப்பகுதியால் பயணித்த பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இளம்பருவத்திலேயே மாணவர்கள் காட்டிய இந்தச் சமூகப் பொறுப்புணர்வு, ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது என பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.