வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய் கோர விபத்தில் பலி – ஆபத்தான நிலையில் குழந்தைகள்!!

258

தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25.07.2026) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணின் இரு குழந்தைகளும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை நோக்கிப்பயணித்த டிப்பர் ரக லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று பாதசாரியான பெண் மற்றும் இரு குழந்தைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் செல்ல தயாராக ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக தம்புள்ளை நகருக்கு சென்றபோது விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதன்போது மூவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கபுவத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம். திலானி அரோஷா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 19 வயதான மூத்த மகன் தம்புள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் பிரபல கல்லூரியில் பயிலும் ஒரு திறமையான தடகள வீரர் என்றும், இந்த ஆண்டு நடைபெறும் உயர்தர பரீட்சைக்கு தயாராகி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர், எட்டு நாட்களுக்கு முன்பு இலங்கை திரும்பியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.