வவுனியாவில் 5 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த ஊஞ்சல் : தாய் காயம்!!

377

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த கிராமத்தில் உள்ள வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் தடி எதிர்பாராத விதமாக முறிந்து சரிந்து விழுந்துள்ளது. அப்போது தாயுடன் இருந்த 5 மாதக் குழந்தை மீது தடி விழுந்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் குழந்தையின் தாயாரின் காலிலும் தடி விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.