
வவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசாவின் உத்தியோகபூர்வ வீட்டின் மீது நேற்று (25.09) இரவு 9.45 அளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ இலத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதலால் பிரதேச செயலாளருக்கோ வேறு எவருக்குமோ பாதிப்பு ஏற்படவில்லை. தாக்குதல் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாக பிரதேச செயலாளர் கே.உதயராசா தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா, மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக்கவின் ஆலோசனையில் வவுனியா வலய சிரேஸ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த விக்ரமசிங்கவின் கண்காணிப்பில் வவுனியா பொலிஸ் பரிசோதகர் சன்ன அபேரத்ன தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.





