
வவுனியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் நாட்டிலேயே அதிகூடிய வெப்பநிலை வவுனியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த அபாயகரமான வெப்பமான காலநிலை நிலைமை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றிய வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, நிலவும் கடும் வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகளை மிகக் கவனமாக திட்டமிட்டு முன்னெடுக்குமாறு விவசாய அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தினார்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் தற்போதைய பெரும்போக பருவ நெல் அறுவடை மற்றும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்டச் செயலாளர் என். கமலதாசன், பிரதேச செயலாளர்கள் உட்பட விவசாயம், நீர்ப்பாசனம், கமநல சேவைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






