இந்தியாவில் சிறுவர்கள் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை!!

20

இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது மற்றும் இரவு நேர இணைய பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் சமூக சீர்கேடான உள்ளடக்கங்கள் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளிப்படையாக உலா வருகின்றன. இதை பார்க்கும் சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு சிலர் வழி தவறி செல்லவும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, 13 வயதுகுட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

அதோடு இரவு நேரங்களில் சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்க வேண்டும். சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டாய வயது சரிபார்ப்பு முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமுல் செய்யவேண்டும் என்று கோரி குறித்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த டில்லி மேல் நீதிமன்றம், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு மற்றும் தடை விதிப்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது. எனினும், மனுதாரர்கள் சுட்டிக்காட்டிய தீவிரமான சிக்கல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று டில்லி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.