
அளவெட்டி பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மல்லாகம் நீதிமன்றம் வீதியைச் சேர்ந்த சந்திரசேகரம் கொலின்ஸ் (20), தேவராசா ஜெகநாதன் (23) ஆகியோர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு இளைஞரான சின்னராசா யூட் அன்ரனி (23) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர்கள் நேற்று இரவு பண்டத்தரிப்பில் இடம்பெற்ற தாச்சிப் போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.
இவர்களை மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த நால்வர் கொண்ட குழு ஒன்று வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனினும் இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவரவில்லையென கூறிய தெல்லிப்பழைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





