13ம் திகதி கொழும்பு – யாழ். ரயில் சேவையை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கிறார்!!

688

jaffna

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 12ம் திகதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கி வைப்பதுடன் 13ம் திகதி பளை – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி இரு மாவட்டங்களிலும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதுடன் மக்கள் பேரணிக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கும் வைபவத்தில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்டு நஷ்டஈட்டுக்கான காசோலைகளை கையளிக்கவுள்ளார்.

புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் அரச அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு கிளிநொச்சி ‘நெலும் பியச’ தாமரை இல்ல மண்டபத்தில் 12ம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

வட மாகாணத்தில் யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள், அங்கவீனமுற்றோர்களுக்கு இந்நிகழ்வில் நட்டஈடு வழங்கப்படுவதுடன் யுத்தத்தினால் சிதைவடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மத வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்கும் நிதியுதவி வழங்கப்படவுள்ளன.

பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான ரயில் சேவையே ஜனாதிபதியினால் 13ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மக்கள் எதிர்பார்ப்பான கொழும்பு யாழ்ப்பாண ரயில் சேவை கனவு நனவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்குக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள் நெடுந்தீவு பிரதேச சபைக் கட்டிடத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.