இலங்கையில் இந்தாண்டு பேஸ்புக் துஷ்பிரயோகம் காரணமாக 1500 கணக்குகள் முடக்கம்!!

777

Facebook

இலங்கையில் பேஸ்புக் துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1500 பேஸ்புக் பயனாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் ஊடாக யுவதிகளை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் இனங்காணப்பட்டு அவை தடைசெய்யப்பட்டுள்ளன.

பேஸ்புக் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இலங்கை கணணிசார் அவசர வினையாற்றல் குழு இதற்கான பரிந்துரைகளை செய்திருந்தது. பல்வேறு நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மட்டும் பேஸ்புக் முறைகேடுகள் தொடர்பாக சுமார் 1800 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த வினையாற்றல் குழுவின் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை போலிப் பெயர்களில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பேஸ்புக் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 011 2 691 692 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.