இந்திய அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் வேய்ன் பிராவோ, வேய்ன் சுமித் களமிறங்கினர்.
வேய்ன் பிராவோ 17 ஓட்டங்களில் சமி பந்தில் தவானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சுமித் 46 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் டேரன் பிராவோ 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் இதனையடுத்து மார்லன் சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.
தினேஷ் ராம்தின் 61 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் மார்லன் சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவர் 116 பந்துகளில் 126 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 50 ஓவர் முடிவில் மேற்கிந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் குவித்துள்ளது.
322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 41 ஓவர்களில் 197 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் முன்னதாக களமிறங்கிய ரஹானே 24 ஓட்டங்களும், தவான் 68 ஓட்டங்களும் எடுத்தனர், பின்பு களமிறங்கிய கோஹ்லி, ராயுடு, ரெய்னா மற்றும் டோனி சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஜடேஜா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், மேற்கிந்திய தீவுகள் அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.