வெள்ளவத்தையில் நிர்க்கதியாகியுள்ள யாழ். இளைஞர்கள்!!

566

Wellawatte

யாழ்.குடாநாட்டிலிருந்து அரபு நாட்டுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக அனுப்பி வைப்பதாக கூறி 25 பேரிடமிருந்து பணம் பெற்ற முகவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பணம் கொடுத்த இளைஞர்கள் கொழும்பில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 25 இளைஞர்கள் டுபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறிய முகவர் ஒருவரிடம் தலா 60ஆயிரம் ரூபா வீதம் வழங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் யாழ்.குடாநாட்டிலிருந்து கொழும்புக்கு ஏற்றிச் செல்லப்பட்டு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் நேற்றைய தினம் இரவு அவர்களுக்கான விமானம் செல்லவுள்ளதாகவும் அதற்கான தயார்படுத்தல்களுடன் இருக்குமாறும் முகவர் இவர்களுக்கு கூறியுள்ளார்.

அதற்கமைய அவர்கள் தயாராகியிருந்த நிலையில் இன்று மாலை வரையில் முகவர் அவர்களிடம் வராததுடன், முகவரின் தொலைபேசியும் வேலை செய்யவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே இருந்துவிட்டு இன்றைய தினம் மாலை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.