நீண்ட காலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியை விடுவிக்க கோரி வவுனியாவில் இன்று (10.10) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் வவுனியா நீதிமன்ற வளாகம் வரை சென்றபோது, நகரசபை பிரதான விதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
எனினும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் சென்றமையினால் அவர்களை நீதிமன்றம் வரை செல்ல பொலிஸார் அனுமதித்திருந்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்திற்கு முன்பாக கூடியவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியாக சிறிது நேரம் நின்றதன் பின்னர் மீண்டும் நகரசபை மைதானத்தை வந்தடைந்தனர்.
இதன்போது ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும், நிபந்தனை இன்றி அரசியல் கைதிகளை விடுதலை செய், சிறிலங்கா அரசே தாயையும் மகளையும் பிரிக்காதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டும், எமது வாழ்வு எமது கைகளில் அந்நியரிடமில்லை, போடாதே போடாதே பெய் வழக்கு போடாதே போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர்.
இப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், ஈ.சரவணபவன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தென்னிலங்கை மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாதிரிமார், காணாமல் போனோரின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.