வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும்த கடும் மழை காரணமாக வவுனியா குளம் உட்பட்ட பெரும்பாலான குளங்களில் வான் பாய்கிறது.
இதனால் பூந்தோட்டம் பாதையூடான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை, தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதன்காரணமாக வவுனியா, புதியவேலர் சின்னக்குளம், பொதுநோக்கு மண்டபத்தில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 173 பேரும் விளக்குவைத்த குளம் முன்பள்ளியில் 22 குடும்பங்களைச் சோந்த 82 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வவுனியாவின் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகளில் அதிகளவான மழை நீர் தேங்கிநிற்பதால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடும் மழையால் 1446 பேர் இடம்பெயர்வு..
வவுனியாவில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் 414 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் ரி.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று பெய்த மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செட்டிகுளம் பகுதியில் 17 குடும்பங்களும், வவுனியா வடக்கில் ஒரு குடும்பமும், வவுனியாவில் 396 குடும்பங்களுமாக 414 குடும்பங்களைச் சேர்ந்த 1446 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் செட்டிகுளம் பகுதியில் உள்ள வேப்பங்குளமும் வவுனியாவில் பாலாமைக்கல் குளமும் உடைப்பெடுத்துள்ளது.
இதேவேளை இடம்பெயர்ந்தவர்களை தங்கவைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.சூரியராஜா தெரிவித்தார்.
-படங்கள் திரு-