மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.
பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை தனிப்பட்ட முறையில் தமக்கும் நாட்டுக்கும் பாக்கியமான செயல் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரித்துள்ளார்
இன்று காலை இலங்கையை சென்றடைந்த பாப்பரசரை வரவேற்ற பின்னர் இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
கொடிய யுத்தத்தின் பின்னர் நாடு சமாதானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தமது அரசாங்கம் சமாதானத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தமது விஜயத்தின் போது பாப்பரசர் இலங்கையின் சமாதானத்துக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, போரின் பின்னர் விட்டு செல்லப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு நீதியை நிலைநாட்டுவது என்பது இலகுவான காரியமல்ல. எனினும் அதனை வெற்றிக்கொள்ள நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற விடயங்களில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்று பாப்பரசர் ஆலோசனை கூறினார்.
பல்வேறு இனங்கள் வாழும் நாடு என்ற வகையில் இலங்கையில் சக வாழ்வு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் பாப்பரசர் கோரிக்கை விடுத்தார்.










