உலகக்கிண்ணப் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியை நீக்க சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் உலகக்கிண்ணப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் பலர், பாரம்பரியமாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கிலாந்து உலகக்கிண்ண அணிக்கு அணித்தலைவராக, அயர்லாந்தைச் சேர்ந்த இயன் மோர்கன் உள்ளார். இவரைத் தவிர, கேரி பலன்ஸ் (சிம்பாப்வே), பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து) உள்ளிட்ட வீரர்கள் வேறு நாட்டினை சேர்ந்தவர்கள். அதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டன், மேற்கிந்திய தீவுகளின் பார்படோசை சேர்ந்தவர்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் பழைய விதியை பயன்படுத்தி தான் மோர்கன் உள்ளிட்ட வீரர்களை தெரிவு செய்து, இங்கிலாந்து அணி பலன் அடைய முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது பழைய ஐ.சி.சி விதி 2010, 3.3ன் படி, தெரிவு செய்யப்படும் வீரர் அந்த நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். அதேநேரம், 7 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட நாட்டில் குறைந்தது 183 நாட்கள் தங்கியிருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேநேரம், புதிய விதிப்படி,சம்பந்தப்பட்ட நாட்டில் 6 வயது, 6 மாதத்தில் இருந்து வசிப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து 12 மாதத்துக்கு மேல், வேறு நாட்டில் தங்கியிருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அணித்தலைவர் அலெஸ்டர் குக் தான், இதை வெளியில் கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து, இந்தப் புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) ஏற்கனவே விசாரிக்கத் தொடங்கி விட்டது. இதில் இங்கிலாந்து அணியின் மீதான தவறு நிரூபிக்கப்பட்டால், உலகக்கிண்ணத் தொடரில் இருந்து அந்த அணி நீக்கப்படலாம் என்ற மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.