முள்ளியவளை சுதர்சனின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவாகிய ”அனுபவி ராசா” எனும் குறும்படம் 29.01.2015 அன்று பிப 3.00 மணியளவில் மு.முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது. மு.குமுளமுனை ம.வி அதிபர் கமலகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வைத்தியர் சிவதாஸ் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக முள்ளியவளை இலங்கை வங்கி முகாமையாளராகிய திரு ஆனந்தராஜ் அவர்களும், முள்ளியவளை ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் திரு நிமலச்சந்திரன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வரவேற்புரையினை செல்வி சுதர்சுயா வழங்க. வாழ்த்துரையினை வித்தியாலய அதிபர் திரு ஜெயவீரசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். ‘குறும்படத்தின் ஆதரவும் முக்கியத்துவமும்’ எனும் தலைப்பில் ஊடக நண்பர் திரு ஜெயராஜ்அவர்கள் உரையாற்ற சிறப்புரையினை வைத்தியர் சிவதாஸ் அவர்கள் வழங்கினார்.
வாழ்த்துரையில் அதிபர்.. ” சுதர்சன் பாடசாலைக்காலத்திலேயே கலை உணர்வு நிரம்பப்பெற்றவன்” எனும் பொருள்பட கருத்திட்டார். ஜெயராஜ் தனதுரையில் ” எமக்கு கதை சொல்ல கற்பனை தேவையில்லை. எமக்கான கதை கனக்கவே இருக்கிறது எனவும் ஈரானிய படங்களை எடுத்துக்காட்டி கருத்துரைத்திருந்தார்.
வைத்தியர் சிவதாஸ் தனதுரையில்.. மனங்கள் மாறவேண்டும். கறுப்பு அல்லது வெள்ளை எனும் பிடிவாதப்போக்கில் சற்று மாற்றம் தேவை எனவும். எமது படைப்புக்களுக்கும் வெளியீடுகளுக்கும் ” எண்ணிக்கை அவசியமில்லை.. நல் எண்ணங்களே அவசியம் ” என்றார்.
மிகவும் அழகான முறையில் பாடசாலை மண்டபத்தில் வெளியிடப்பட்ட ‘அனுபவிராசா’ எனும் கதையானது.. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடம் ஊர் உறவுகள் காசு கேட்பதை மையமாக வைத்து தயாரிக்கப் பட்டிருக்கிறது. இப்படத்தில் ஓரிடத்தில் ” ஊரில இருக்கேக்க எங்கள கணக்கெடுக்க மாட்டினம். வெளிநாடென்டோன புதுப் புது உறவுகள் வருகினம்” இப்படி பேசப்படுகிறது. இது உண்மையில் வெளிநாட்டிலிருக்கும் ஒவ்வொருத்தரின் ஆதங்கமாகவே இருக்குமென எண்ணுகிறேன்.
குறும்பட வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. 29.01.2015 அன்று சுதர்சனின் தாயாரின் பிறந்த நாளென்பதால்.. தாயாரின் கைகளால் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 10 மாணவர்களுக்கு இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வைத்தியர் சிவதாஸ் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து.. நிகழ்வை ஒழுங்கமைப்பு செய்தவர் எனும் வகையில் சுதர்சன் சார்பாக என்னால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் ஏற்கனவே வெளியிடப்பட்ட தூரதேசம் குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடி இரண்டு மணித்தியாலைய நிகழ்வு ஐந்து மணிக்கு நிறைவு கண்டது. அது மன நிறைவையும் தந்தது.
பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது.. முல்லைமாவட்டத்தில் குறும்பட வெளியீடுகள் மிகக்குறைவே. களம், கதை, கரு, காட்சிப்பொருள் அதீதமாக முல்லைமண்ணில் நிரம்பப்பெற்றிருந்தாலும் போதிய தொழில் நுட்ப வளங்கள் மற்றும் தொழில் நுட்பவியளாளர்கள் இன்மையே இதற்குக் காரணம் எனலாம். ஆனாலும் எம்மவருக்கு இதில் எவ்வளவு ஆர்வம் இருக்கென்பதுவும் கேள்விக்குறியே..
பொதுவாகவே ஒரு படைப்பை வெளியிடும் படைப்பாளி இரண்டு விடயத்தையே அதீதம் எதிர்பார்ப்பதுண்டு. 01 மனமுவந்த பாராட்டு. 02 அப்படைப்பிற்கான அங்கிகாரம். ஆனால் இதில் ஒன்றையேனும் நம்மவர்களால் அப்படைப்பாளிக்கு தாராளமாக வழங்க முடிகிறதா என்பதுவும் கேள்விக்குறியே…?
மனதளவில் நொந்து நூலாகிப்போயிருக்கின்ற எம்மவரை தரமான படைப்புக்களாலும்.. நல்ல கலைகளாலும் ஓரளவிற்கேனும் ஆற்றுப்படுத்த முடியும் என்பது என் திண்ணம். அதி வேகமாய் சுழலும் வாழ்க்கைச்சக்கரத்திலும் அன்றாடம் நிகழும் மன உழைச்சல்களுக்குள்ளும் நல்ல நூல்களை வாசிப்பதும் நல்ல படைப்புக்களை பார்ப்பதும், அதற்காக நேரம் ஒதுக்குவதும் என்பது சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும் அதுவே எம் மனப் போராட்டத்திற்கான ஓர் வடிகால்களாகவும் இருக்கும் என்பதை சில வேளைகளில் மறந்து போகிறோம்.
-முல்லைத் தீபன்-