அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் ‘நாங்கள்’ அமைப்பு ஆகியன இணைந்து நடத்தவுள்ளது. இது தொடர்பில் அவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு..
இலங்கை தனது 67 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி விட்டது. தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும் முயற்சிக்கின்றது. ஆயினும் முன்னைய வருடங்களைப் போல அல்லாது, இம்முறை இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளினதும் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும், இலங்கையிலுள்ள அனைத்து குடியினங்களாலும் நிராகரிக்கப்பட்டதாகவும் உள்ள ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ நீக்கப்படவில்லை. சிவில் சமூகத்துக்கும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்கும், சவால் விடுவிக்கும் இந்தச் சட்டம் ஒன்றே, இலங்கையில் இன மொழி சமய கலாசார வேறுபாடின்றி, பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் எதிர்காலத்தை சூனியமாக்கியது.
எவ்விடத்திலும் எவ்வேளையிலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்’என்ற நமட்டுத்துணிச்சலையும் அசட்டு அதிகாரத்தையும் கொடுத்த இக் கொடுஞ்சட்டம், ஊழலை எதிர்த்தவர்கள் மீதும், எதிர்க்கேள்வி கேட்டவர்கள் மீதும், சமூக அநீதிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீதும் கூடப் பாய்ந்தது. கொடுமையிலும் கொடுமை, அதிகார வர்க்கத்தின் சிற்றின்பங்களுக்கும் பாலியல் இச்சைகளுக்கும் உடன்பட மறுத்தவர்கள் மீதும் கூடப்பாய்ந்ததுதான். அது சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் என்று எத்தகைய வகைப்படுத்தல்களையும் காட்டவில்லை.
இதனால் பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள், தடுப்புக் காவல்களுக்கும் சிறைக்கூடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களில் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். மனித உரிமைப் பிரகடனங்களை வழித்தொடரும், மனித மாண்புகளுக்கு கௌரவிப்பளிக்கும் நாடாக இலங்கை தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறது எனில், ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும்.
‘அரசியல் கைதிகள்’ எனும் சொற்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுபேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப் பிழைத்திருப்போர்’ பெயர் விபரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயற்பட்டன. அவற்றை நிர்வகித்துக் கொண்டிருந்தவர்கள் யார்’ என்பன பற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும். ‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும்.
‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும். இவ்வாறு இலங்கை மக்களின் நெஞ்சை அழுத்தும், குரல்வளையை நெரிக்கும் சமகாலப்பிரச்சினைகளுக்கு பதிலளிக்குமாறும், தீர்வளிக்குமாறும் இலங்கை அரசை வலியுறுத்தி, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வினருடன் இணைந்து, வடக்கு கிழக்கில் செயற்பாட்டு வலயமைப்பைக் கொண்டுள்ள ‘நாங்கள்’ இயக்கத்தினர் கவனயீர்ப்பு நிகழ்ச்சியை நாளை மறுதினம் செவ்வாய் கிழமை, வவுனியா நகரசபை மைதானத்தில் நடத்த இருக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.