ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது : 11ம் திகதி வரை விளக்க மறியலில்!!

822

Thissa

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு சுகாதார அமைச்சர் பதவியும் கிடைக்கப்பெற்றிருந்தது. சுமார் இரண்டு வாரங்கள் வரை அவர் சுகாதார அமைச்சர் பதவியில் செயலாற்றியிருந்தார்.

இக்காலப்பகுதியில் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் அவ்வாறான ஒரு ஆவணம் ஒன்றையும் அவர் வெளிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் குறித்த ஒப்பந்தம் போலியானது என்றும், அவ்வாறான ஒரு ஒப்பந்தம் நடக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்திருந்தது. அத்துடன் இது தொடர்பாக பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார், தமது விசாரணைகளை தொடர்வதற்கு வசதியாக திஸ்ஸ அத்தநாயக்கவை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்க 11ம் திகதி வரையில் விளக்க மறியலில்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தநாயக்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று காலை கைது செய்திருந்தனர்.

பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் பிரச்சாரக் காலத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பிலான ஆவணங்களையும் அத்தநாயக்க சமர்ப்பித்திருந்தார். குறித்த ஆவணம் போலியானது எனவும் அதற்கான ஆதாரங்கள் உண்டு எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடத்துவதற்காக திஸ்ஸவை விளக்க மறியலில் வைக்குமாறு குற்ற விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர்.