வவுனியா பூவரசங்குளத்தில் பாடசாலையிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!!

651

Sivasaththi Aananthan

வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்பப் பாடசாலையில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பூவரசு ஆரம்பப் பாடசாலையில் விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இதனால் இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தடையாகயுள்ளது.

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தனியார் காணிகளில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அப்புறப்படுத்தப்பட்டு அக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முந்தைய அரசாங்கமும் இது தொடர்பில் அக்கறைகாட்டவில்லை, எமது கோரிக்கைகளை புதிய அரசாங்கம் செவிமடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிசார் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சருக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே இங்கு கல்வி பயிலும் சுமார் 125 மாணவர்களின் நலன் கருதி விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுமாறு அவர் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.