பாரிசில் கறுப்பினத்தவர் ஒருவரை ரயிலில் ஏற விடாமல் கால்பந்து ரசிகர்கள் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் பிரித்தானியாவை சேர்ந்த செல்சி அணியுடன், பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி மோதியது.
போட்டியை காண்பதற்காக ஏராளமான செல்சி அணி ரசிகர்கள், ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது கறுப்பினத்தவர் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது, அவரை அனைவரும் ஏற விடாமல் தடுத்துள்ளனர்.
எனினும் அதனை பொருட்படுத்தாது ரசிகர்களை தள்ளி விட்டு ஏற முயன்ற அந்த கறுப்பினத்தவரை அனைவரும் சேர்ந்து மீண்டும் கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதனால் அவரால் அந்த ரயிலில் ஏற முடியாமல் போயுள்ளது. இச்சம்பவத்தை ரயில் நிலையத்தில் குவிந்திருந்த ஏராளமான மக்கள் பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ரயிலில் ஏறிய பிரித்தானிய கால்பந்து ரசிகர்கள், “நாங்கள் இனவெறி பிடித்தவர்கள்… இப்படிதான் நடந்து கொள்வோம்” என்று கூச்சலிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை பொலிசில் புகார் செய்யப்படவில்லை என்றாலும், செல்சி அணியின் நிர்வாகம் அந்த ரசிகர்களை இனம் கண்டு அவர்களின் பருவக்கால பயணச்சீட்டுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.