வவுனியா மகாறம்பைக்குளம் பிஸ்சி ஒழுங்கையில் இன்று (04.03) புதன்கிழமை காலை துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆணொருவரின் சடலம் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது வவுனியா வைரவபுளியங்குளம் பிரதேசத்தில் உணவகமொன்றினை நடத்திவருபவரான வடிவேல் (45) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 7ற்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளையும் இப்பகுதியில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
மரணமானவர் முன்னர் வவுனியா நகரில் சன் ரீ.வி மீள் ஒளிபரப்பு நிலையத்தை நடத்தி வந்தவர் என்பதுடன் கடந்த 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளினால் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பான வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.