மண்டபம் மேற்கு கடற்கரையில் சுற்றித்திரிந்த இலங்கையர் ஒருவர் மண்டபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கஜேந்திரன் என்பரே கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவர் ஒரு எயிட்ஸ் தொற்று நோயாளி என்றும் தமிழகத்தில் உள்ள அவரது மனைவியை பார்க்கவே வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து 500 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் வெள்ளிமுத்து, சமயன், நைனா முகம்மது, ஆறுமுகம் ஆகிய 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு பிளாஸ்டிக் படகு ஒன்று வந்துள்ளது.
அதில் இருந்த ஒருவர் மற்றுமொரு நபரை மீனவர்கள் படகில் ஏற்றிவிட்டு அவரை மண்டபத்தில் இறக்கிவிடும்படியும் மறுத்தால் மீன்பிடிக்க விடமாட்டோம் என்றும் மிரட்டியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனை அடுத்து அச்சமடைந்த மீனவர்கள் குறித்த நபரை மண்டபம் கடற்கரையில் இறக்கிவிட்டு மண்டபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரான கஜேந்திரனை கைது செய்துள்ளனர்.
கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து மண்டபம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மாலைமலர்-