‘சிங்கப்பூரின் தந்தை’ லீ க்வான் யூ மரணம்!!

781

Singapor

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ, தனது 91 வயதில் இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் காலமானார்.

நவீன சிங்கப்பூரை உருவாக்கி, பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி பெற செய்த சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ, நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

லீ க்வான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்து சிங்கப்பூரை வளர்ச்சியாக்கி காட்டியவர். அவரது மறைவு, ஒரு வார துக்க தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ-மூன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

லீ க்வான் யூ, செப்டம்பர் 16ஆம் திகதி 1923 இல் சிங்கப்பூரில் வசதியான சீனக் குடும்பத்தில் பிறந்தார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் ,1950 இல், கேம்ப்ரிட்ஜ் பிட்ஸ் வில்லியம் கல்லூரில் சட்டம் பயின்றார் . 1954 இல் மக்கள் செயல் கட்சியின் பிரிவில் ஜெனரல் ஆனார்.
1955 இல் சிங்கப்பூரின் புதிய அரசியல் சட்டம் அமலாக்கத்துக்கு காரணமாக இருந்தார்.

அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை , நியமன உறுப்பினரையும் சேர்த்து 32 ஆக உயர இவரே காரணமாக இருந்தார்.

மலேசியாவிலிருந்து திடீரென பிரிந்தபோது , கண்ணீரோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு , தனது தொலை நோக்குச் சிந்தனையால் நவீன சிங்கப்பூரை உருவாக்கினார்.

1959 முதல் தொடர்ந்து 1990 வரை, உலகின் நீண்ட காலப் பிரதமர் என்ற வரலாற்றைப் பெற்றார்.

12 நவம்பர் 1954 இல் மக்கள் செயல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அக் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது.
1992 வரை அக் கட்சியின் செயலாளர் ஜெனரலாக இருந்தார்.

1959ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி லீ. முதல் பிரதமர் ஆனார். 1963 இல் மலேசிய கூட்டமைப்பில் இணைய பாடுபட்டார்.

1965 ஆகஸ்ட் 7 இல் மலேசியாவிலிருந்து பிரிய ஒப்பந்தம் ஏற்படக் காரணமாக இருந்தார். அதன் பிறகு சுயாட்சி பெற்ற சுதந்திரக் குடியரசு எனப் பிரகடனப் படுத்தினார்.

வெளிநாட்டு மூலதனத்தைப் பெருக்க முற்பட்டார். 1968, 1972, 1976, 1980 ஆகிய தேர்தலில் இவரது மக்கள் செயல் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இன்று வரை இக் கட்சியே ஆட்சியில் உள்ளது.

இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் லீ சியான் லூங் தான் இன்றைய பிரதமர். இவரது ஆட்சிக் காலத்தில் 18 வயது நிரம்பிய ஆண்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் பட்டது.

இதனால் , இன்று சிறந்த இராணுவப் படை, பொலிஸ் படை, குடிமைத் தற்காப்புப் படையோடு சிங்கப்பூர் திகழ்கிறது. தனி நபர் வருமானத்திலும் முதல் நாடாக விளங்குகிறது.