நாளை இந்திய அணி வெற்றிபெற்று 23 ஆண்டு வரலாற்றை தொடருமா?

402

IND

உலக கிண்ண கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

1992ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992ம் ஆண்டு உலக கிண்ணத்தை ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996ம் ஆண்டு உலக கிண்ணத்தை இன்னொரு ஆசிய அணியான இலங்கையும் கைப்பற்றின.

இதன் பிறகு 1999ம் ஆண்டு பாகிஸ்தான், 2003ம் ஆண்டு இந்தியா, 2007ம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்று போனது.

2011ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. உலக கிண்ணத்தில் இரு ஆசிய அணிகள் இறுதிச்சுற்றில் சந்தித்தது அதுவே முதல் முறையாகும்.

நடப்பு உலக கிண்ண திருவிழாவில் பிரதான ஆசிய அணிகளில் இலங்கை, பாகிஸ்தான், பங்காளதேஷ் கால்இறுதியுடன் வெளியேறிவிட்டன. இப்போது ஆசிய அணிகளில் இந்தியா மட்டுமே எஞ்சி இருக்கிறது. சிட்னியில் நாளை நடைபெறும்  அரைஇறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் களம் காண்கின்றது.

இதில் இந்தியா வெற்றி பெற்றால், 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் சிறப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இந்த அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

துறைமுக நகரான சிட்னியில் நேற்று மழை பெய்தது. இன்றும் பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டி நாளன்று மழை வாய்ப்பு 10 சதவீதம் மட்டுமே நிலவுகிறது. .

ஆனாலும் முந்தைய நாள் மழையால் ஆடுகளத்தின் தன்மை மாறக்கூடும். மழை மிரட்டல் இருந்தாலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டன.