பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இலிருந்து 250 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையுடன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய புதிய தேர்தல் முறைக்கான யோசனையை இன்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் முன்வைக்கவுள்ளார்.
இப்புதிய தேர்தல் முறையின்படி 140 உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும் 80 உறுப்பினர்கள் மாவட்ட விகிதாசார முறையிலும் 30 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள்.
இதன் அடிப் படையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் கட்சித் தலைவர்களிடம் முன்வைக்கவுள்ள புதிய தேர்தல் முறை யோசனை அமைந்துள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தப் புதிய தேர்தல் முறை ஆராயப்படவுள்ளது. தேர்தல் ஆணையாளர் முன்வைத்துள்ள இந்தப்புதிய தேர்தல் முறையின்படி 140 தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணய செயற்பாடுகள் கட்சித்தலைவர்களின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்பே நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இன்று இந்த புதிய தேர்தல் முறை பற்றி ஆராயவுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் ஏப்ரல் 6 ஆம் திகதி ஒன்று கூடி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய தேர்தல் முறைமை பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் பாராளுமன்ற குழுவும் இன்று கூடி ஆராயவுள்ளது. ஐ.ம.சு. முன்னணி இது பற்றி ஆராய்ந்த பின்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் ஆலோசனைகளையும் பெற்ற பின்பே இறுதித்தீர்மானத்தை எடுக்கவுள்ளது.