2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய கற்பகபுரம் கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இவ்விழா நேற்று (03.04) நடத்தப்பட்டது.
ஆலய தலைவர் திரு.தங்கராஜா தலைமையில் நடத்தப்பட்ட இவ்விழாவில், 2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பதினான்கு மாணவர்கள் தலா இரண்டாயிரம் ரூபாய் நிதி உதவியும், கற்றல் உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கற்பகபுரம் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு முதல் தடைவையாக முதல் மாணவியாக தெரிவாகியுள்ள செல்வி சரண்யா கோபாலகிருஸ்ணன் எனும் மாணவிக்கு கௌரவிப்பும் ஊக்குவிப்புத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவில் பிரதமகுரு கந்தசாமி குருக்கள் ஐயா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்களான பரமேஸ்வரன் பாபு, தர்மலிங்கம், ஆறுமுகம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர், ஆசிரியர் நித்தியானந்தன், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள், மாணவர்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய விருந்தினர்கள் அனைவரும், கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் சமுக செயல்பாடுகளை பாராட்டிப்பேசியதுடன், ஏனைய ஆலயங்களும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.