பார்வையிழந்த மாணவன் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை!!

1030

Paarvai

பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது பார்வையிழந்த மாணவன் ஒருவர் ப்ரெய்லி எழுத்து மூலம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சாதனை படைத்துள்ளார்.

கடுவலை கொத்தலாவல கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் படித்து கொண்டிருந்த ஹர்ச நிலுபுல் நயனப்பிரிய என்ற மாணவன் திடீரென நரம்பு வியாதி காரணமாக பார்வை இழந்தார். இதனையடுத்து பெற்றோர் மாணவனை பார்வையற்றோர் படிக்கும் பாடசாலையில் சேர்த்துள்ளனர்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் ப்பிரெய்லி எழுத்து முறையில் தேர்வு எழுதிய அவர், வரலாற்று பாடத்தில் பீ. சித்தியும், சிங்களம், சமயம், விவசாயம், சமூக கல்வி ஆகியவற்றில் சீ சித்தியும் சங்கீதம் மற்றும் கணிதம் ஆகியவற்றிலும் சித்தி பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளார்.

8 வருடங்கள் வரை சாதாரண சிங்கள எழுத்தில் படித்து வந்த அவர், பார்வையிழந்த பின்னர் இரண்டு வருடங்களில் ப்பிரெய்லி எழுத்து முறையை கற்றுக்கொண்டு பரீட்சையில் சித்தியடைந்திருப்பது மிகப் பெரிய சாதனை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மகனின் திறமை குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவரது தாயான நிலுகா சுபாஷினி,

எனது மகனுக்கு சிறு வயதில் நன்றாக பார்வை இருந்தது. பார்வையில் சிறிய குறைப்பாடு இருந்தது. கண்ணாடி அணிந்தால், சரியாகி விடும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

இடது கண் தெரியவில்லை என 8 ஆம் வகுப்பு படிக்கும் போது மகன் கூறினார். நாங்கள் அவரை கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். இடது கண்ணில் சவ்வு கழன்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்.

நரம்பு கோளாறு நோய் என்பதால் சவ்வை பொருத்த முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மகனை நாங்கள் இரத்மலானை பார்வையற்றோர் பாடசாலையில் சேர்த்தோம். மகனின் இடது கண் முற்றாக பார்வையிழந்து விட்டது. வலது கண்ணில் சற்று பார்வை இருக்கிறது. வலது கண்ணிலும் எதிர்காலத்தில் பார்வை இழந்து போகும் என மருத்துவர்கள் கூறினர் என்றார்.

பரீட்சையில் சித்தியடைந்தது குறித்து தெரிவித்த ஹர்ச நிலுபுல், நான் மிகவும் ஆசையோடு படிக்கின்றேன். . இரண்டு கண்களில் பார்வையில்லை என்ற போதிலும் அதனை கற்பதற்கு தடையாக கருதவில்லை.

நான் விளையாட்டில் வெற்றி பெற்றிருக்கின்றேன். செஸ் போட்டியில் கிண்ணம் வென்றுள்ளேன். கண் தெரியாவிட்டாலும் நான் இடைநடுவில் நிறுத்த போவதில்லை. நன்றாக படிக்க வேண்டும்.

நான் படிப்பதற்கு மடிக் கணனியும் ப்பிரொய்லி தட்டச்சு கருவியும் கிடைத்தது பெரிய புண்ணியம் என்றார்.