வவுனியா விபத்தில் குழந்தை பலி : மூவர் படுகாயம்!!(படங்கள்)2ம் இணைப்பு!!

970

வவுனியா பனிக்கங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை பலியாகியதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டிமீதே யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு வாகனம் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த தரணிக்குளத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை பலியானதுடன் குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது..

முச்சக்கரவண்டி சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் எதிர்த்திசையிலிருந்து வந்த சொகுசு வாகனம் வீதியை கடந்துகொண்டிருந்த மாட்டின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து முற்சக்கரவண்டி மீது மோதியது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் கிடங்கொன்றினுள் வீசப்பட சொகுசு வாகனமும் முச்சக்கரவண்டியைத் தள்ளியவாறு சென்றது.

இதனையடுத்து அயலவர்கள் ஓடிச்சென்று முச்சற்சக்கரவண்டியில் அகப்பட்டவர்களை காப்பாற்றியபோதிலும் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தது.

இதனையடுத்து காயமடைந்தவா்கள் புளியங்குளம் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இந் நிலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த ஓமந்தை பொலிசார் சொகுசுவாகனத்தை ஓட்டிச் சென்றவரின் பாதணிகளை வாகனத்தில் இருந்து எடுத்துக்கொடுத்து காரொன்றில் ஏற்றி எங்கோ உடனடியாக அனுப்பியிருந்தனர்.

சம்பவத்தை நோரில் பார்த்தவர்கள் இவ் விபத்து தொடர்பில் எடுத்துக்கூறியபோதிலும், பொலிசார் அதில் அக்கறை செலுத்தாமல் சொகுசு வாகனத்தில் பயணித்தவர்களை கவனிப்பதிலேயே ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர் சொகுசு வாகனத்தில் வந்தவர்களையும் அழைத்துச் சென்று விட்டனர். ஆனால் சம்பவத்தில் பாதிப்படைந்தவர்கள் தொடர்பில் பொலிசார் அக்கறை காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் புளியங்குளம் பொலிசாரிடம் சாரதி தொடா்பில் கேட்டபோது வாகனத்தை செலுத்தி வந்தவர் யார் என தெரியாது எனவும் சாரதி தப்பிவிட்டார் எனவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 2 356789