
காவத்தை – கொட்டகெத்தென்ன பிரதேசத்தில் 39 வயது சந்ரானி சுவர்ணலதா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது 18 வயது மகனான உசாந்த மகேஸ் ஸ்ரீயானந்த இன்று (10.04) பெல்மடுல்ல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
தாயை கொலை செய்ததாக குறித்த நபர் வாக்குமூலம் அளிதத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காவத்தை பொலிஸாருக்கு மேலதிகமாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய விசேட விசாரணைகளிலேயே அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களாக பொலிஸார் முன்னெடுத்த விசேட விசாரணையின் பிரதிபலனாகவே அவரை கைது செய்ததாகவும் சந்தேகநபரான மகன் கொலை தொடர்பில் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசேட வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
கொலை செய்யப்பட்டிருந்த சந்ரானி சுவர்ணலதா என்ற குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்ற நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
முன்னதாக கொட்டகெத்தனவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 39 வயதான மூன்று பிள்ளைகளில் தாயின் கொலை தொடர்பில் அவரது கணவரிடம் பொலிஸார் விசேட விசாரணை ஒன்றினை மேற்கொண்டதுடன் இளைய சகோதரன், மகன், அயலவர்கள் என 40 பேரின் வாக்குமூலங்களையும் விசாரணைகளையும் முன்னெடுத்து வரும் காவத்தை பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான விசேட குழுவும் பதிவு செய்திருந்தது.
இந்த கொலை தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எல்.டீ.ரணவீரவின் கீழ் இடம்பெற்று வந்த நிலையிலேயே நேற்று இந்த மர்மம் துலக்கப்பட்டது.
சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 6 பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மண்டை ஓடு சுக்குநூறானதில் மரணம் சம்பவித்ததாக தெரிய வந்தது.
இந் நிலையில் அந்த பெண்ணை படுகொலை செய்த சந்தேக நபர்கள் கைவிரல் ரேகை, டீ.என்.ஏ.மூலக் கூறுகளை அழிக்கும் விதமாக அவரது சடலத்தை கொட்டகெதன நீரோடைக்குள் போட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகித்ததுடன் கொலையை செய்ய தனி நபர் ஒருவரை விட ஒரு குழு அல்லது இருவர் தொடர்புபட்டிருக்க வேண்டும் எனவும் சடலத்தை வீட்டிலிருந்து நீரோடைவரை கொண்டு செல்ல முச்சக்கர வண்டியொன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஊகித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் கேட்ட 1500 ரூபாவை தாய் கொடுக்க மறுத்ததன் விளைவாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டன.
பெண் கொலை செய்யப்பட்ட சமயத்தில் வீட்டில் அவரது 18 வயது மகன் மாத்திரமே இருந்துள்ளார். கொலை செய்யப்பட்ட 32 வயதான சந்ரானி சுவர்ணலதா என்ற பெண்ணின் சடலம் கொட்டகெத்தன பகுதி ஓடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இக்கொலை தொடர்பில் விசாரணைக் குழுவினர் பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






