இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படும் அரச தலையீடுகளை பரிசீலிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணிப்பாளர்கள் சபை கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அதிகாரிகளை தேர்வுசெய்வதற்கு இருக்கும் உரிமை தொடர்பாகவும் ஐ.சி.சி யாப்பு மீறப்படுகிறதா என்றும் பேச்சுவார்த்தை அடித்தளமாக அமைந்துள்ளது.
இதற்கு திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் அரச தலையீடுகள் சம்பந்தமாக முறையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் அது குறித்து இறுதித் தீர்மானமொன்றை எடுக்க முடியவில்லை எனவும் ஐ.சி.சி.யின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் பணிப்பாளர்கள் சபை கூட்டத்தில் இலங்கையிலிருந்து எவராலும் பங்கு பற்ற முடியாமல் போயுள்ளது. கூட்டத்தில் பங்குபற்ற இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினரான நுஸ்கி மொஹமட் சென்றுள்ள அதேவேளை, சட்ட ரீதியாக கூட்டத்தில் பங்குபற்ற முடியா தென ஐ.சி.சி.யின் பணிப்பாளர்கள் சபை அவரிடம் தெரிவித்துள்ளது.






