வயோதிப தாயை கொலை செய்த மகன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

517

Murder

புஸல்லாவை, கொத்மலை பகுதியில் மகனொருவன் தனது தாயை தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மாரிமுத்து லெட்சுமி (78) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த தாய்க்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் நால்வர் ஆண் பிள்ளைகள் ஆவர். ஒரு மகன் இறந்து விட்டார், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், தனது மனைவியை இழந்துள்ள இரண்டாவது மகனான மாரிமுத்து குணசேகரன் (46) என்பருவருடனே வசித்து வந்துள்ளார்.

பெரட்டாசி தோட்டம் ரஸ்புருக் பிரிவில் குடியிருப்பு தொகுதி 26, வீட்டு இலக்கம் 04 இல், வாழும் இரண்டாவது மகனுக்கு குணசேகரன் குகேந்திரன் என்ற 16 வயதான மகனும், 5 வயதில் பெறாத மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில், தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்படுவது வழக்கம். எப்போதும் போல வியாழக்கிழமை அன்று இரவு 9.00 மணியளவில் இருவருக்கும் இடையில் தகறாறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, என்னை காப்பாற்றுங்கள், என்னை கொல்ல போரான் என்ற அபயக்குரலும் அயலவர்களுக்கு கேட்டுள்ளது. இவ்வாறான அபயக்குரல் அடிக்கடி கேட்பதால் அயலவர்கள் அதனை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை.

மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குணசேகரன் மகனான குகேந்திரன் வீட்டுக்கு திரும்பிய போது, பாட்டி இறந்து இருப்பதை கண்டுள்ளார். அத்துடன் தன்னுடைய தந்தையான குணசேகரன், மலசல கூடத்துக்கு அருகில் குழி ஒன்றையும் வெட்டிக் கொண்டிருந்துள்ளார்.

மேலும், மலசலக் கூட குழியின் மூடியையும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பொது மக்களும் கண்டுள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தினால் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று சந்தேக நபரான குணசேகரன், ஹெம்மாத்தகமவுக்கு சென்று தான் விற்ற மரக்கறிக்கான பணத்தை முதலாளியிடம் பெற்றுக்கொண்டு மது போதையில் இருந்துள்ளார். வீட்டுக்கு வந்தவுடன் பிள்ளைகளை வீட்டிலிருந்து உறவினர் வீட்டுக்கு விரட்டியுள்ளார்.

இதன் பின்னரே தாய்க்கும் மகனுக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. தாய் கடுமையாக தாக்கப்பட்டு அங்கங்கள் உட்பட முகம் கூட தெரியாத அளவுக்கு சேதமாக்கப்பட்டுள்ளது. பின் சாரி, சேட் மற்றும் துணிகள் கொண்டு சடலத்தை சுற்றி, அதன்மீது நஞ்சு மருந்து தெளிக்கப்பட்டுள்ளது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததன் பின்னர், சடலம் கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக புஸல்லாவ பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில் சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி தனது தாய்க்கு ஏற்பட்ட நோய் காரணமாக அவரது கன்னத்தில் பாரிய கட்டி ஒன்று இருந்தது. அதனை பார்த்த தோட்ட மக்கள் எனது தாயை குறை கூறி வந்தனர். அதனால், கட்டியை அகற்றினேன். ஆனால், தாய் இறந்து விட்டார் என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.