பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்று வங்கதேசம் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான்- வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது.
எனினும் இடைநிலை வீரர்களான ஹாரிஸ் சோகைல் (44 ஓட்டங்கள்), சாத் நசிம் (77 ஓட்டங்கள்), வஹாப் ரியாஸ் (51 ஓட்டங்கள்) ஆகியோர் தாக்குப்பிடித்து விளையாடி அணியை ஓரளவு தூக்கி நிறுத்தினர். 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் தமிம் இக்பால் தூண் போல் நிலைகொண்டு விளையாடி பாகிஸ்தானை சிதறடித்தார். அவருக்கு முஷ்பிகுர் ரம் (65 ஓட்டங்கள்) தோள்கொடுக்க, வெற்றிப்பயணம் சுலபமானது. முதலாவது ஆட்டத்தில் சதம் அடித்த தமிம் இக்பால் இந்த ஆட்டத்திலும் சதத்தை பதிவு செய்தார்.
முடிவில் வங்கதேச அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிம் இக்பால் 116 ஓட்டங்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வங்கதேசம் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரை வங்கதேச அணி வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.






