இந்தோனேஷிய போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிக்கு நேற்று சிறையில் திருமணம் நடைபெற்றது.
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட வெளிநாட்டினர் உள்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இரு அவுஸ்திரேலியர்களும் அடங்குவர்.
இவர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் இதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த துயரமான நேரத்திலும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் நடந்துள்ளது. அது மரண தண்டனை கைதிகளில் ஒருவரான அவுஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சானின் (Andrew Chan Age-31) திருமணம் தான்.
முன்னதாக பாலி சிறையில் ஆண்ட்ரூ சான் அடைக்கப்பட்டிருந்த போது, அங்கு வந்து செல்லும் இந்தோனேஷியாவை சேர்ந்த பெண் பாதிரியாரான பெபியான்டி(Febyanti) என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.
தற்போது ஆண்ட்ரூ சானின் இறுதி நாட்கள் நெருங்குவதை தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இவர்களின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டவே நுசகம்பன்கன்(Nusakambangan) சிறையில் நேற்று பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்குப்பின் ஆண்ட்ரூ சானின் சகோதரர் மைக்கல் சான் கூறுகையில், இது எங்களுக்கு கடினமான நேரம், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த இளம் ஜோடி மீது ஜனாதிபதி கருணை காட்டுவார் என நாங்கள் இன்னும் நம்புகிறோம் என கூறியுள்ளார்.







