ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 65 வயது பாட்டி!!

567

old lady

ஜேர்மனியில் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பள்ளி ஆசிரியையான அனீக்ரெட் ரவுனிக் (65) என்பவர், தற்போது அந்நாட்டு ஊடகங்களின் மூலம் பிரபலமாகியுள்ளார்.

5 கணவர்கள் மூலம் ஏற்கனவே 9 முதல் 44 வயது வரையிலான 13 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர், தனது கடைசி குழந்தையான 9 வயது மகளின் ஆசையை நிறைவேற்ற குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பியதாகவும், இதற்காக வெளிநாட்டுக்கு சென்று செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதாகவும் (ஜேர்மனியில் இந்த வகை கருத்தரிப்புக்கு அனுமதி இல்லை) இவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜேர்மனியில் அவருக்கு நடத்தப்பட்ட பேறுகாலத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையில் அனீக்ரெட்டின் வயிற்றுக்குள் ஒரே நேரத்தில் நான்கு கருக்கள் உருவாகியுள்ளது தெரியவந்தது. அவரது வயதை கருத்தில் கொண்டு அச்சம் தெரிவித்த வைத்தியர்கள் இந்த பிரசவம் நல்லமுறையில் நடக்க வாய்ப்புகள் குறைவு என கடந்த மாதம் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 655 கிராம் முதல் 960 கிராம் எடையில் ஒரு பெண் மற்றும் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. 26-வது வாரத்திலேயே குழந்தைகள் பிறந்து விட்டதால் எடைக்குறைவாக உள்ளன. உயிர்காக்கும் சாதனங்களில் (இன்குபேட்டர்) வைக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அனீக்ரெட் ரவுனிக்கும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.