மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசாமில் உள்ள கவுகாத்தியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கலந்து கொண்டு பேசுகையில், மசூதிகள் மத வழிபாட்டு தலங்கள் அல்ல, அதை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம். எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்திற்கு அசாமில் உள்ள கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அசாமில் தேர்தல் வர உள்ள நிலையில் வகுப்பு மோதல்களை தூண்டும் வகையில் சுப்ரமணியசாமியின் பேச்சு அமைந்துள்ளது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதையடுத்து அந்த அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அசாமில் சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அசாம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணியசாமிக்கு கடந்த 19ஆம் திகதி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், இதுவரை சுப்பிரமணியசாமியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, சுப்பிரமணிசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, சுப்பிரமணியசாமியை கைது செய்து 30 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.





