போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்று இன்று (04.06.2015) காலை 9 மணியளவில் நடைபெற்றது.
“புகையிலைப் பொருட்களின் தவறான உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை தடுத்தல்” என்பதற்கு அமைய போதைப்பொருள் அரக்கனுக்கு பாடைகட்டி, வெடிகொளுத்தி இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய பாடசாலை மாணவர்களும் பிரதேச மற்றும், மாவட்ட செயலக ஊழியர்களும் மணிக்கூட்டுக் கோபுரம், பசார் வீதி ஊடாக ஊர்வலமாகச் சென்று 9.30 மணியளவில் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தனர்.
மாவட்டச் செயலகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான நாடகம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வவுனியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து “ஐந்து நிமிடத்தில் போதைப்பொருளை கைவிடல்” எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி நடைபெற்றது.
இப் பேரணியில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், பண்டாரிக்குளம் விபுலானந்தா மகா வித்தியாலயம், கோவில்குளம் இந்துக் கல்லூரி,இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக வவுனியா மாவட்டச் செயலகத்திலிருந்து பாஸ்கரன் கதீசன்-








