வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை : ஜோசப் மைக்கல் பெரேரா!!

580

perera

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு உத்தியோகபூர்வமாக தமது அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என உள்விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட முடியவில்லை என குற்றஞ்சாட்டி, அவரை இடமாற்றுமாறு கோரி வவுனியாவின் மக்கள் பிரதிநிதிகள் வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியமையை ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் மாகாண சபையினால், உரிய அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.



ஆனாலும், வட மாகாண சபையினால் இதுவரை தமது அமைச்சுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்காத பட்சத்தில், மாவட்ட செயலாளருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதென அமைச்சு குறிப்பிட்டது.

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.