யாழ். சுன்னாகத்தில் நடைபெற்ற இனிமையான பெறுமதி மிக்க நிகழ்வான முத்தமிழ் சங்கமம் 2015 நிகழ்வு சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளையினர் நடாத்தியிருந்தனர்.
சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் திருமண மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை கிளையின் தலைவர் சைவசித்தாந்த முதுகலைமாணி சி. கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அறிஞர் பெருமக்கள் கதிரமலை சிவன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
விழாவின் பிரதம விருந்தினராக வருகை தந்த யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிக துறைத்தலைவர் பேராசிரியர் மா. வேதநாதன் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தார்.
சர்வதேச இந்து இளைஞர் பேரவையினர் துறைசார்ந்த அறிஞர் பெருமக்களையும் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் விருது வழங்கி கௌரவித்தனர்.
அதனை தொடர்ந்து இறைவன் இங்கே இறங்கி வந்தால்? என்ற தலைப்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக பதிவாளரும் காணிப்பதிவாளருமான ஜெ. கோபிநாத் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது.
இலங்கை மற்றும் லண்டனில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முத்தமிழ் சங்கமம் நிகழ்வினையும் கட்டுரைகளையும் உள்ளடக்கி “முத்தமிழ் சங்கமம்” என்ற நூலினை பேராசிரியர் மா. வேதநாதன் வெளியிட சட்டத்தரணி வி. மணிவண்ணன் பெற்று கொண்டார்.






