பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மைதானத்தில் இன்று ஐந்தாவதும் இறுதியுமான போட்டி நடைபெறுகின்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை திணறடித்த இலங்கை அணி சார்பில், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குஷல் பெரேரா 116 ஓட்டங்களையும் டில்ஷான் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 368 ஓட்டங்களைக் குவித்துள்ளது. மெத்தியூஸ் 70 ஓட்டங்களுடனும் சிறிவர்த்தன 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இதன்படி 369 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் பாகிஸ்தான் அணி அடுத்தாக களமிறங்கி விளையாடிவருகின்றது.
ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.






