முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ’டிவி’ பார்த்து செய்தால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளது.
முறையாக செய்வதன் மூலம் பல அற்புத பலன்களை பெற இயலும். யோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது.
சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்களை வராமல் தவிர்க்கலாம். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். முன்னால் குனியும் ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்ததை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளையும், ஞாபக சக்தியையும் பெருக்க முடியும்.
அறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் கழித்தே யோகா பயிற்சி செய்ய வேண்டும். உளவியல் ரீதியான பிரச்சனை உள்ளவர்கள் ’பை பாஸ்’ இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள் டாக்டர்கள் ஆலோசனைக்கு பின் பயிற்சியில் ஈடுபட வேண்டும். உயர் ரத்தஅழுத்தம் உடையவர்கள், இடுப்பு எலும்பு தேய்மானம் உடையவர்கள், இதய நோயாளிகள் ஆகியோர் முன்னால் குனியும் மற்றும் தலைகீழ் ஆசனங்களை செய்யக்கூடாது. கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் பின்னால் குனியும் ஆசனங்களை பயிற்சி செய்யக்கூடாது.
மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் வகைகளை விட்டுவிட வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின் வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும். தகுதியற்ற அரைகுறை யோக பயிற்சியாளர்கள் பலர் இன்று தோன்றி உள்ளனர். எனவே ஆசிரியரின் தகுதியறிந்து நல்ல யோக நிபுணரிடம் நேரடியாக பயிற்சி பெற வேண்டும்.