வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவது என வவுனியாவின் சில சிவில் அமைப்புக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
நேற்று (09.08.2015) வவுனியா கலைமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் புதிய மாக்ஸிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இந்த தேர்தல் சாதிக்கப்போவது என்ன? என்ற கருப்பொருளில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என தெரிவித்த சிவில் அமைப்பு பிரதிநிதிகள் சனல் 4ன் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிநாடுகள் ஆதரிக்கின்ற அதேவேளை, சிங்கள கட்சிகள் அதனை பொய் என நிரூப்பிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பிரதிநிதி என தன்னை வெளிக்காட்டும் சுமந்திரன் சனல் 4 போர்க்குற்ற ஆதாரத்தை பொய் எனவும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி சிங்கள தலைவர்களை மகிழ்வித்துள்ளார்.
இதனை சிவில் அமைப்புக்கள் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அமைப்பின் பிரதிநிதிகள் இன்று நடைபெறும் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் இது தொடர்பாக கேள்வி கேட்கப்படும் எனவும் சுமந்திரன் கலந்து கொண்டால் கறுப்புக் கொடி காட்டுவது எனவும் தீர்மானித்துள்ளனர்.
இச் சிறப்புக் கருத்தரங்கில் தலைமையினை கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பிரதீபனும் சிறப்புரையினை சட்டத்தரணியும் அரசியற்குழு உறுப்பினருமான சோ.தேவராஜா அவர்களும் நிகழ்த்தினார்கள்.






