நமது உணவில் ஊட்டச்சத்தை அளிக்கும் கார்போஹைட்ரேட்டில் அதிகமாக மாச்சத்து, சர்க்கரைச்சத்து அடங்கியுள்ளது.அரிசி, கோதுமை போன்ற பல தானிய வகைகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகளவில் அடங்கியுள்ளன.
நமது உடலில் ஆற்றலை உருவாக்க கார்போஹைட்ரேட் அத்தியாவசியமான ஒன்று.
ஆனால், இந்த ஊட்டச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டை அளவுக்கதிகமாக உட்கொள்வதால் விளைவுகளும் ஏற்படுகின்றன என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
விளைவுகள்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்திய ஆய்வில் கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவற்றை உண்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு கிடுகிடுவென உயருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
இது மன அழுத்தத்தின் காரணிகளான, சோர்வு, தூக்கமின்மை, உடல் பருமன் ஆகியவற்றை தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு பதிலாக முழு தானியங்களையும், பழங்கள், காய்கறிகளையும் உணவில் அதிகமாக சேர்க்கும்படி ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.