எட்டாவது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் வாக்களிப்பில் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் 225 உறுப்பினர்கள் எட்டாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாடு முழுவதும் 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் சார்பாக 3,653 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 2498 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தன.
அடையாள அட்டை அவசியம்
வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்காளர்கள் செல்லும்போது கட்டாயம் ஆள் அடையாளத்தை உறுதிபடுத்தும் ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும். தேசிய அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, வயது வந்தோருக்கான அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், மத குருமார்களுக்கான அடையாள அட்டை மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன கட்டாயமாகும். ஆள் அடையாளத்தை உறுதிபடுத்தும் ஆவணமின்றி வாக்களிக்க முடியாது.
வாக்களிக்கும் முறை
வாக்காளர்கள் காலை வேளையிலிலேயே வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிப்பில் ஈடுபடவேண்டும். வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்தில் அதிகாரிகளினால் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்பிய கட்சியின் சின்னத்துக்கு அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடியிடவேண்டும். அதன் பின்னர் விரும்பினால் மூன்று இலக்கங்களுக்கு விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.
அவ்வாறு செய்துவிட்டு வாக்குச் சீட்டை நன்றாக மடித்து அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் இடவேண்டும். கட்சியின் சின்னம் அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்தின் முன்னால் புள்ளடியிட்டுவிட்டு வேண்டும் எனில் விருப்பு வாக்கை அளிக்காமல் வரலாம். ஆனால் கட்சிக்கோ சுயேச்சை குழுவுக்கோ வாக்களிக்காமல் விருப்பு வாக்களித்தால் அது நிராகரிக்கப்பட்டுவிடும். எனவே வாக்காளர்கள் உரிய முறையில் வாக்களிப்பது அவசியமாகும்.
2 இலட்சம் அரச ஊழியர்கள் பணியில்
தேர்தல் செயற்பாடுகளுக்காக சுமார் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நடவடிக்கைகளில் 125000 அரச ஊழியர்களும் வாக்கு எண்ணும் செயற்பாடுகளில் 75000 அரச ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தேர்தல் நடவடிக்கைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் நேற்றைய தினமே தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள அரச ஊழியர்கள் நேற்று மாலையே தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றுவிட்டனர்.
பாதுகாப்பு
8 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் அனைத்தும் பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 49 பொலிஸ் வலையங்களின் கீழ் உள்ள 438 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கி இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் 70549 பொலிஸாரும் 4225 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாக்களிப்பு நிலைய பாதுகாப்பு
ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு இரு பொலிஸார் வீதம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்களிப்பு நிலையங்களுக்கு மட்டும் 24798 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் 2885 நடமாடும் பாதுகாப்புக் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. . இந்த குழுக்கள் நேற்று தமது கடமைகளை ஆரம்பித்ததுடன் 18 ஆம் திகதி வரையிலும் கடமையில் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்பு
வாக்களிப்பு செயற்பாடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிக்கவுள்ளனர். பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரசபை போன்ற சர்வதேச கண்காணிப்பு நிறுவனங்கள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவின் 9 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். உள்நாட்டு கண்காணிப்பை பொறுத்தவரை பெப்ரல் அமைப்பு 12,314 நிலைகொள் தேர்தல் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்துகின்றது.
வாக்களிப்பு மேற்பார்வை
இதேவேளை தேர்தல் திணைக்களத்தினதும் மேற்பார்வை அதிகாரிகள் தேர்தல் வாக்களிப்பை மேற்பார்வை செய்யவுள்ளனர். அதாவது ஐந்து அல்லது ஆறு வாக்களிப்பு நிலையங்களை ஒரு அதிகாரி பார்வையிடுவார். 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்பார்வை செயற்பாட்டில் ஈடுபடுவார்கள்.
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஏழாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூலை 31 ஆம் திதகியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வரை வேட்பு மனுத்தாக்கல்கள் கோரப்பட்டன.
பிரதான கட்சிகள் களத்தில்
இம்முறை தேர்தல் களத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பிரதானமாக போட்டியிடுகின்றன. பல்வேறு சிறிய கட்சிகள் பிரதான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன
22 மாவட்டங்களில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டி யிடுகின்றன. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்றது. தமிழர் விடுதலை கூட்டணியும் திகாமடுல்ல மாவட்டம் தவிர்ந்த வடக்கு கிழக்கு மாவட்டங்களிலும் கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது.
196 பேர் நேரடியாக தெரிவு
தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.
கொழும்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டத்தில் 1586598 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 19 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 462 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 330 வேட்பாளர்கமாக 792 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 1637537 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 18 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 252 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 336 வேட்பாளர்களுமாக 588 பேர் தேர்தல் களமிறங்கியுள்ளனர்.
களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தில் 897349 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 221 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 65 வேட்பாளர்களுமாக 286 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில் 1049160 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 12 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 255 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 105 வேட்பாளர்களுமாக 360 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 379675 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 112 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 64 வேட்பாளர்களுமாக 176 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் 534190 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 154 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 99 வேட்பாளர்களுமாக 253 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
காலி மாவட்டம்
காலி மாவட்டத்தில் 819666 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 221 வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் 10 தேரர்களும் நான்கு பெண்களும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாவட்டத்தில் 623818 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 143 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 44 வேட்பாளர்களுமாக 187 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 462911 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 7பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 120 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 50 வேட்பாளர்களுமாக 170 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 529229 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 7பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 150 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 60 வேட்பாளர்களுமாக 210 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
வன்னி
வன்னி மாவட்டத்தில் 253058 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 6 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 162 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 90 வேட்பாளர்களுமாக 252 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 128 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 240 வேட்பாளர்களுமாக 368 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
திகாமடுல்லை
திகாமடுல்ல மாவட்டத்தில் 465757 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 140 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 170 வேட்பாளர்களுமாக 310 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் 296852 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 4 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 105 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 42 வேட்பாளர்களுமாக 147 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
குருணாகல்
குருணாகல் மாவட்டத்தில்1266443 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 15பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 216 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 252 வேட்பாளர்களுமாக 468 பேர் தேர்தலில்களமிறங்கியுள்ளனர்.
புத்தளம்
புத்தளம் மாவட்டத்தில் 553009 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 132 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 132 வேட்பாளர்களுமாக 264 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் 636733 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 242 வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்தில் 307125 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 56 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 32 வேட்பாளர்களுமாக 88 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
பதுளை
பதுளை மாவட்டத்தில் 620486 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 99 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 66 வேட்பாளர்களுமாக 165 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
மொனராகலை
மொனராகலை மாவட்டத்தில் 339797 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 80 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 16 வேட்பாளர்களுமாக 96 பேர் தேர்தலில் குதித்துள்ளனர்.
இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்டத்தில் 810082பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 11 பிரதிநிதிகள் ்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 11 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 196 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 84 வேட்பாளர்களுமாக 280 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கேகாலை
கேகாலை மாவட்டத்தில் 649878 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 156 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 72 வேட்பாளர்களுமாக 228 பேர் இந்த மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
இன்று நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே பாரிய போட்டி நிலவுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியி்ன் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இரண்டு கட்சிகளினதும் பிரசாரக் கூட்டங்களை தலைமையேற்று நடத்தினர்.
2010 பாராளுமன்றத் தேர்தல்
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 ஆசனங்களை பெற்றிருந்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி 60 ஆசனங்களை தனதாக்கிகொண்டது. மேலும் ஜனநாயக தேசியக் கூட்டணி 7 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை பெற்றிருந்தன.
முன்னைய தேர்தல்கள்
1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் இது எட்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தலாகும். 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை தொடர்ந்து நீடிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1989, 1994, 2000, 2001, 2004, 2010 ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.





