புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவர் விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 20.08.2015 அன்று வியாழக்கிழமை நண்பகலில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விறகுவெட்டச் சென்றுள்ளார். விறகு வெட்டிக்கொண்டிருந்தபோது மாணவனின் வலக்கையில் இருந்த கத்தி நழுவி இடக் கையை வெட்டியுள்ளது.
சம்பவத்தை அடுத்து சிறுவன் உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி – பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
நடைபெறவுள்ள 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
குறித்த சிறுவனின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்த டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர், சத்திரசிகிச்சையின் மூலம் கையை பொருத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.






