இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றமானது சர்வதேசத்தின் நம்பிக்கையினை வென்றெடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. எனினும் செப்டெம்பரில் வெளிவரவிருக்கும் ஐ.நா.வின் விசாரணை அறிக்கை எவ்வாறானதாக அமையும் என்பதை எம்மால் கணிப்பிட்டுக் கூற முடியாது. ஆயினும் கடுமையான விதிகளைக் கொண்டதாக அறிக்கை அமையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இந்த விசாரணை அறிக்கையின் மூலம் மீண்டும் தேசிய விசாரணை பொறிமுறையை பலப்படுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாயின் உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்தி பக்கச்சார்பு இல்லாத, நடுநிலையான உள்ளக விசாரணைகளை நடத்த அரசாங்கம் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டிருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் போக்கில் நல்லதொரு மாற்றத்தை சர்வதேசம் எதிர்பார்க்கவில்லை என்பதை எம்மால் நன்றாகவே உணரக்கூடியதாக இருந்தது.
எனினும் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையை பாதுகாக்கக் கூடிய வகையில் ஒரு சர்வதேச தீர்ப்பு அமைந்தது. அதாவது இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சர்வதேச விசாரணைக்கு அப்பால் உள்ளக விசாரணை பொறிமுறையினை அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் நாம் தயாரில்லை எனவும் மாறாக இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையை உருவாக்கி அதனூடாக பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் நாம் வலியுறுத்தினோம். அதற்கான கால அவகாசம் தேவைப்பட்டதனால் சற்று நீண்ட கால அவகாசத்தை நாம் கேட்டுக்கொண்டோம். அதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எமக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் கொடுத்திருந்தது.
எனினும் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட மாற்றமானது நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சாதகமான வகையில் அமைந்துள்ளது. அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீதான நம்பிக்கை மற்றும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஜனநாயக மாற்றமானது சர்வதேசத்தை திருப்திப்பட வைத்துள்ளது. அதன் விளைவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் இந்த விசாரணை அறிக்கையை பிற்போட்டுள்ளமையாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சர்வதேச நாடுகள் நல்ல நம்பிக்கையினை வைத்துள்ளன. அதன் விளைவே ஆட்சி மாற்றத்துடன் சர்வதேசம் எம்மீதான கடுமையான பார்வையை விலக்கி நல்ல நட்புறவை வெளிப்படுத்தி வருகின்றது. பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவு இப்போது எமக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல் ஆசியாவின் முக்கிய நாடுகளான இந்தியா –சீனா ஆகிய நாடுகளின் நட்புறவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வென்றுள்ளார்.
ஆகவே இந்த மாற்றங்கள் எமது நாட்டுக்கு நல்ல பலாபலன்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் செப்டெம்பரில் வெளிவரவிருக்கும் ஐ.நா.வின் விசாரணை அறிக்கை எவ்வாறானதாக அமையும் என்பதை எம்மால் கணிப்பிட்டுக் கூற முடியாது. ஆயினும் கடுமையான விதிகளைக் கொண்டதாக அமையாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையின் மூலம் மீண்டும் தேசிய விசாரணை பொறிமுறையை பலப்படுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாயின் அதுவே எமக்குக் கிடைக்கும் சாதகமான முடிவாகும். அதேபோல் உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்தி பக்கச்சார்பு இல்லாத, நடுநிலையான உள்ளக விசாரணைகளை நடத்த எமது அரசாங்கம் தயாராக வேண் டும். அதன் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க வேண்டும். அவ்வாறான மிகச்சிறந்த உள்ளக விசாரணை பொறிமு றையை கையாள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.





