
வவுனியா பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க உள்ளிட்ட இருவரை தொடர்ந்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகபர்களான முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட 9 பேர் நேற்று (புதன்கிழமை) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுள் 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து எழுவரில் ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாவும், மற்றைய ஆறு பேருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாவும் அபராதம் விதித்து, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஏனைய சந்தேகநபர்களான வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் வீ.ராமகமலன் உத்தரவிட்டார்.
வவுனியா குடாக்கச்சி பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர், அண்மையில் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.
இதனையடுத்து அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





