இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் இருவர் கைது!!

663

Gold

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் தங்கத்துடன் இருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாப்பாநாடு கிராமத்தில் வைத்து அதிகாரிகள் ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக முத்துப்பேட்டைக்கு வந்து காரில் தஞ்சை வழியாக சென்னைக்கு கடத்திவரப்பட்ட 15.22 கிலோ தங்கத்தை இருவர் கொண்டு செல்வது தெரியவந்தது.

காரில் இருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த ஷேக்பரூத் (வயது 25), கரூர் மாவட்டம் வெங்கமேட்டை சேர்ந்த கார்த்திகேயன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் தங்கக் கட்டிகளை காரில் இருந்த சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரையும் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஷேக்பரூத், கார்த்திகேயன் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறைசாலையில் அடைக்கப்பட்டனர்.